வில்வமரம்
Aegle marmelos
வில்வமரம் என்று தமிழில் அழைக்கப்படும் இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் பெரும்பாலும் இந்துமத ஆலயங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் வேறு பெயர்களாவன கூவிளம், கூவிளை,சிவத்துருமம், நின்மலி, மாலுரம் போன்றவையாகும். இம்மரம் வெப்ப மண்டல,மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரும். வடிகால் வசதியுள்ள ஈரமுள்ளப் பகுதிகளிலும் செழித்து வளரும்.
இமயமலை அடிவாரம், ஜீலம், பலுசிஸ்தானம் மற்றும் இந்திய தீபகற்பத்தின் தென்பகுதி வரையிலும் இம்மரம் பரந்து காணப்படுகிறது.

இப்பழத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள், டேனிக் ஆசிட், பேக்டின் மற்றும் வழவழப்பான சத்துக்களும், மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதை உறுதி செய்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின், பிஸ்கிமானின் போன்ற சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதன் விதைகள், இலைகள்,தண்டுகளிலிருந்து ஒருவிதமான எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது பூச்சிக் கொல்லியாக பயன்படுகிறது.
இதன் இலைகளின் ஓரத்தில் முள் இருக்கும். இந்த இலைகள் உடல் வெப்பத்தைத் தணித்து இரத்தத்தைத் தூய்மைப்படுத்த வல்லவை. இலைகளை ஊற வைத்த நீரை அருந்தினால் பித்த நோய், நரம்பு வாயு, கண்நோய் ஆகியன குணமாகும். பெண்களின் பெரும்பாடு நோயையும் போக்கவல்லது. இதன் பழச்சாற்றை அருந்துவதால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
நூறு வருடங்களுக்குமேல் வயதான வில்வமரத்தின் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நீங்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். நபிகள் நாயகம் வில்வபழத்தை சிறந்த மருந்து என்று பல இடங்களில் கூறியுள்ளார்.
இதன் அறிவியல் பெயர் ஏகில் மார்மிலாஸ் (Aegle marmelos)என்பதாகும்.